கரையைக் கடக்கத் தொடங்கியது கஜா

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.
தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11-ஆம் தேதி உருவெடுத்தது. இப்புயல் வியாழக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
10 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி, ராமேசுவரம், தூத்துக்குடி துறைமுகங்களில் 8-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி, காரைக்காலில் 9-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், நாகப்பட்டினத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. சில இடங்களில் கடல் அலை 2 மீட்டர் உயரம் வரை எழும்பி சீற்றத்துடன்காணப்பட்டது.
110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று:  நகரும் வேகம் குறைந்ததால் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் புயல் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது.
பலத்த மழை: புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மழை, கன மழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக நாகை மாவட்டத்தின் பல இடங்களில் பனை, தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன. புயல் கரையைக் கடக்கும்போது இடி, மின்னல் தொடர்ந்தது.
நாகையில்... நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்ட கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 44 ஆயிரம் பேர் 102 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 75 பேரும், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 180 பேரும் நாகை மாவட்டப் பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.
புயல் தீவிரம் 6 மணி நேரம் நீடிக்க வாய்ப்பு: புயல் கரையைக் கடந்தாலும், அதன் தீவிரம் 6 மணி நேரம் வரை இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும்.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை