தொலைக்காட்சியும் வானொலியும் கல்வி கற்பிப்பதில் எவ்வாறு உதவியாய் இருக்கின்றன?



வானொலி, தொலைக்காட்சி - கல்விக்கு எப்படி உதவிகரமாக இருக்கின்றன?
கல்வி கற்பித்தல் பணிக்கு வானொலி 1920ல் இருந்தும், தொலைக்காட்சி 1950ல் இருந்தும் உறுதுணை புரிந்து வருகின்றன. கல்வியில் இந்த ஊடகங்களின் பயன்பாடு, மூன்று முறைகளில் பின்பற்றப்படுகின்றன.
நேரடியாக பாடங்களை ஒலிபரப்பு செய்தல் - இம்முறை, தற்காலிகமாக, ஆசிரியர்கள் இல்லாத போது, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க உதவுகிறது.
பள்ளிக்கல்வி - (கல்வி ஒலிபரப்பு) - இது பாடம் நடத்தும் ஆசிரியருக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும் கல்வி கற்கும் உபகரணங்கள் வேறு இல்லாத போது இம்முறை பயன்படும்
சமூகம், நாடு, உலகம் தழுவிய பொதுவான கல்வி நிகழ்ச்சிகள், பொதுவான மற்றும் முறைசாரா கல்வி வசதிகளை வழங்குகிறது.
நேரடி பாடம் நடத்துதலுக்கு, வானொலி மூலம் பள்ளிக்கல்வி பாடங்கள் பெரிதும் உதவுகிறது.  இதில், கணிதம், அறிவியல், சுகாதாரம், மொழிகள் ஆகிய பாடங்களில், மாநில மற்றும் தேசிய அளவிலான பாடத்திட்டங்களில் வானொலிப்பாடங்கள் தயார் செய்யப்பட்டு வகுப்பறையில்  தினமும் 20-30நிமிடம்  ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இது பள்ளியில் பாடங்கள் எடுக்கும் தரத்தை மேம்படுத்த உதவும்.
மேலும் முறையான பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கும், வசதி வாய்ப்பு குறைவாக உள்ள பள்ளிகளுக்கும் பேருதவியாக இருக்கும். வானொலிப்பாடங்கள் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது முதலில் 1980ல் தாய்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990களில் இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேப்பால் ஆகிய நாடுகளில் கொண்டுரவப்பட்டது.  இம்முறை மற்ற தொலை தூரக்கல்வி முறைகளிலிருந்து எப்படி மாறுபட்டது என்றால், இம்முறையின் முக்கிய நோக்கம்,  அனைவருக்கும் கல்வி அளிப்பதைத் தாண்டி,   தரமான கல்வி கற்பித்தலே ஆகும். இதனால் இம்முறை, முறையான கல்வி மற்றும் முறைசாரக்கல்வி அளிப்பதில், பெரும் வெற்றி பெற்றுள்ளது.  உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இத்திட்டம் கல்வி அறிவு பெறுதல், அனைவருக்கும் சமமான கல்வி அளித்தலில் பெரும் முன்னேற்றம் பெற உதவிபுரிந்துள்ளது என கண்டு பிடித்துள்ளனர். மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இத்திட்டத்திற்கு ஆகும் செலவும் மிகக்குறைவே.
ஓரிடத்தில் தயாரிக்கப்பட்ட தொலைக்கல்வி நிகழ்ச்சிகள் செயற்கைகோள் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திலும் வெவ்வெறு பாடங்கள் விளக்கப்படுகின்றன. மாணவர்கள் இதன்மூலம் பல ஆசிரியர்களின் பாடங்களை கேட்டு விளக்கம் பெறுகின்றனர்.  தேவையான விளக்கம் அளிக்க வகுப்பறைகளில், அனைத்து பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர் இருப்பார்.
இம்முறை மூலம் பாடங்களை வழங்குதலில், பல ஆண்டுகளில், நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நிபுணர் பேசுவது மட்டுமில்லாமல், ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்ளுதல், நேயர்களை நிகழ்ச்சியோடு ஒருங்கிணைத்தல் ஆகிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின்போது, சமூக பிரச்சனைகளை நிகழ்ச்சிகளில் கொண்டுவருவது, அதற்கு தீர்வு காண்பது, குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த  கல்வி வழங்குவது, பல்வேறு நிறுவனங்களோடு சமூகத்தை இணைப்பது, பள்ளிக் கூடங்களை நன்முறையில் பராமரித்தல் ஆகியவை சேர்க்கப் படுகின்றன. இதனால் மாணவர்களும் தங்களை சமூகப்பணியில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். தொலைக்காட்சி கல்வி நிகழ்ச்சிகளின் மூலம் சமூகத்தில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்களின் தேர்வுத்திறன் அதிகரித்துள்ளது. ஆசியாவில், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட, சைனாவில் 44 வானொலி, தொலைக்காட்சி பல்கலைக்கழங்கள், இந்தோனேசியாவில் டெர்புகா பல்கலைக் கழகம், போன்றவை, அதிக மக்களை அடைவதற்காக இம்முறையை பயன்படுத்தியுள்ளன.  இந்த நிறுவனங்கள் ஒளிபரப்போடு புத்தகங்கள், ஒலி நாடாக்களையும் சேர்த்து வழங்குகின்றன.
இம்முறைகள் அனைத்தும் வகுப்பறை ஆசிரியருக்கு மாற்றாக இருக்க முடியாது. மாறாக, பள்ளிக்கல்வி முறையை நன்முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருக்கும். ஆசிரியர்கள் ஒலிபரப்பு பொருட்களை தங்கள் பாடத்திட்டத்தில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  வளர்ந்துவரும் நாடுகளில் பள்ளிக்கல்வி ஒலிபரப்பு, மத்திய கல்வி மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகங்களால் சேர்ந்து செய்யப்படும் ஒரு பணியாக இருக்கிறது.
பொதுவான கல்வி நிகழ்ச்சிகளில் - செய்திகள். நிகழ்வுகள், வினா விடை, உரைச்சித்திரம், கல்வி சம்பந்தப்பட்ட படக் காட்சிகள் இடம்பெறுகின்றன.  இவை முறைசாராக்கல்வி வாய்ப்புகளை நேயர்களுக்கு வழங்குகின்றன.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை